அன்று
என் வாழ்வின் மூன்று வயதிற்கும், பத்து வயதிற்கும் இடைப்பட்ட காலம் அது. கல்வி அறிவற்ற, சொற்பமான பணம் படைத்த குடும்பத்தில் பிறந்த முதல் தலைமுறை மாணவன், விடா முயற்சி, ஹாக்கி விளையாடும் திறன், சிறந்த கல்வி அறிவு, எதிலும் புதுமை, இவை அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்த என் நெருங்கிய உறவினர் தான் என் கதாநாயகனாக திகழ்ந்தார். இன்று இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் அவர் பயின்ற கல்லூரியில் இவரின் திறமை கல்லூரியின் முதல்வர் வரை பிரபலம். லட்சியங்களை உறுதி செய்து அதற்கான முழு உழைப்பையும் களமிறக்கி பாடுபட அவர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் என் நெஞ்சில் பசு மரத்து ஆணியாக பதிந்துள்ளது. அவற்றை இப்பொழுது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. எதிலும் உண்மையாக முழு கவனம் செலுத்தி செயல்படும் என் உறவினனுக்கு, காதலும் அவ்வாறே நேர்ந்தது. அவள் பொய்யானவள், என்பதை ஜீரணிக்க முடியாதவன், பித்து பிடித்து தன் உயிரை மாய்த்து கொண்டான். லட்சிய பாதையால் பயணிக்கும் ஒருவனை திசை மாற்றி அவன் வாழ்வை முடிக்கும் சக்தி காதலுக்கு உண்டு என்பதை நான் அன்று தான் அறிந்தேன். அவரின் இறுதி மரியாதை அன்று அவருக்கு அமெரிக்கவில் இருந்து தொழில்நுட்பம் சார்ந்த சஞ்சிகை ஒன்று அனுப்பபட்டிருந்தது. அதை பார்த்து நான் பெற்ற உள்ளக்குமுறல்கள் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று.
இன்று
நான் வளர்ந்து விட்டேன். இளநிலை பொறியியல் படிப்பையும், மூன்று ஆண்டுகள் தகவல் தொழில்நுட்ப பணியையும் கடந்து விட்டேன். இதுவரை என் வாழ்வில், நட்பை கடந்த, காதலை நெருங்கிய, காதலை தொட்டு விட்ட, பெண்கள் இருந்தது உண்டு. அனால் இவற்றில் எதுவும் எனது லட்சிய பாதையில் மாற்றங்களை நிகழ்த்தவில்லை. என்னை என்றும் மனித உணர்வுகளிடம் இழக்காமல், அவற்றை மேல் அடுக்கிலிருந்து அனுபவித்து பயணிக்கும் என் லட்சிய பாதையின் துவக்கம் என் உறவினனின் மரணமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
கனவுப் பாதையில்,
வந்தியதேவன்
